Friday, July 1, 2011

தமிழக சட்டமன்ற தேர்தல் - 2011 ஓர் ஆய்வு



2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 முடிவடைந்து மே-13 வரையான ஒருமாத கால இடைவெளியின் போது வெளியான ஆரூடங்கள், களப்பணி ஆய்வுகள், பத்திரிக்கை துறையின் கள ஆய்வு விபரங்கள் அனைத்தும் தமிழக வாக்காளர்களின் இதயத் துடிப்பினை அதிகரித்த வண்ணம் இருந்தது. மே.13 2011 காலை 7.55 மணிக்கு ஒட்டு மொத்த தமிழகத்தின் காதுகளும் முடிவுக்காக காத்திருந்த போது ஓர்; மயான அமைதிக்குள்ளிருந்து மெல்லிய ஆரவார முனகல்கள் தமிழகம் முழுவதிலுருந்து எழ, ஆளுங்கட்சி கூட்டணியும், எதிர்க்கட்சி கூட்டணியும் பத்திரிக்கைகளும் வாக்காளர்களும் எதிர்பார்க்காதபடி தமிழக அரசியல் முடிச்சு அவிழத் தொடங்கியது.

கிராமத்தில் வழங்கும் ஒரு சொலவடையை நினைவு படுத்தியது. தேர்தல் முடிவு “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” ஆளும் திமுக கூட்டணியின் தொடர் இடைத் தேர்தல் வெற்றியும் பலம் வாய்ந்த கூட்டணிக் கட்சிகளின் சக்தி, எதிரணியை மிரளச் செய்யும் பொருளாதார, அடியாள் பலம் பிரச்சாரத்தை கடைக்கோடி வரை எடுத்து செல்லும் ஊடக பலம், தேர்தல் கமிசனின் இடுக்கு பிடியையும் மீறி செயல்பட துணிந்த அதிகார பலம் அனைத்தும் தமிழக மக்களிடம் தோற்று போனது. கூட்டணி கட்சிகளின் சதவீத வாக்கு வங்கி, சகதிக்குள் சிக்கி சிறையுண்டது. ஆளும் கூட்டணி அடித்த புயலில் சிக்கியது எப்படி? எங்கிருந்து புயல் அடிக்க துவங்கியது? அகோரமாக வீசிய புயலில் உடைமைகளை இழந்த போதும் கூட குறைந்த பட்சம் கட்டியிருந்த வேட்டியைக் கூட காப்பாற்ற இயலாமல் போனது ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

அப்படியென்றால் தமிழகம் பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகத் துவங்கி விட்டதா? ஆரிய மாயைக்குள் திராவிடம் சிக்கிக் கொண்டதா? விடை வேண்டும் என்றால் தமிழ்த் திரைப்படங்களில் வரும் ப்ளாஷ்பேக் போல ஐந்து வருடம் பின்னோக்கி வாருங்கள்…

2006-தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்), பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியிலும் அ.தி.மு.க., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஓர் அணியாகவும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனியே ஓர் அணியாகவும் மோதி, தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சி வரிசையில் வலிமையுடன் அ.தி.மு.க அணியும் தேர்தல் வாக்கு விகிதத்தில் நெஞ்சை நிமிர்த்தும் அளவு.. தே.மு.தி.கவும் தேர்ச்சி பெற்றது. 2009 பாராளுமன்றத் தேர்தலின் போது கூட கூட்டணி மாற்றம் நிகழ்ந்தும் தி.மு.க, காங்கிரஸ், வி.சி. அணியே பெரும்பான்மையினை தட்டி சென்றது. 2011 சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணியுடன் களமிறங்கிய தி.மு.க அணி பாராளுமன்றத் தேர்தல் வெற்றியில் கால் பகுதி கூட சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போனது ஏன்? அப்படியென்றால் வீசியது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அலையா? தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பேரலையா? அரசியலை ஆத்மாவாக நேசிப்பவர்கள் முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்வியின் போது எழும் வினாவோடு தொடர்புடையது இந்த கேள்வி? என்றே புரிந்து கொள்வர். அ.தி.மு.க. எதிர்ப்பு அலையை அறுவடை செய்வது தி.மு.க. என்றால் தி.மு.க. எதிர்ப்பு அலையை அறுவடை செய்வது அ.தி.மு.க.வாக இருந்து வந்துள்ளது.



அ.தி.மு.கவின் நிலைப்பாடு

1. ஈழமக்களின் விடுதலை வீரன் பிரபாகரனை பிடித்து வர சட்டசபையில் தீர்மானம் இயற்றியது
2. குறைந்தபட்ச விலைவாசி உயர்வு?
3. வேலை நியமனத் தடை சட்டம் அரசு ஊழியருக்கு எதிரான பார்வை
4. கட்சிக்காரர்களைக் கவனிக்காத போக்கு
5. நீதித்துறையுடன் சிறியளவு மோதல்
6. மாற்றுக் கட்சியிலிருந்து காசைக் காட்டி ஆள் சேர்க்காமல் விட்டது
7. மின்தடையினை அமுல் செய்யாதது
8. மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தாதது
9. கட்சிக்காரர்களை அடக்கி வைத்தது?
10. கட்சிக்காரர்கள் ஊரை ஏப்பம் விடாமல் பாதுகாத்தது
11. தலைமை ஆரம்பத்தில் திரைப்பட நட்சத்திரங்களுடன் சிறிது உரசலைக் கடை பிடித்தது
12. காவல்துறைக்கு கடிவாளமிடாமல் தன் கட்சிக்காரர்களைக் கூட காவல்துறையினரிடமிருந்து பாதுகாக்க முடியாமல் இருந்தது.
13. மன்னார்குடி உள்ளிட்ட கட்சி ஆதிக்க பிரமுகர்கள் கட்சியை ஆட்டிப் படைத்த போதும் கட்சியை விழுங்காமல் காப்பாற்றியது
14. ஸ்பெக்ட்ரம் போன்ற இமாலய ஊழல்களில் சிக்காமை
15. ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது கவலைப்படாமல் முகத்தைத் திருப்பி கொண்டது
16. ஈழ ஆதரவு பேச்சுக்காக சீமான், அமீர் போன்றவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியது?
17. ஈழ ஆதரவு தமிழ் தேசிய ஆதரவு வாக்கு வங்கியைக் கொண்டிருந்த வை.கோவை உடன் வைத்து கொண்டது. பின் கடைசியில் கழற்றி விட்டது.
18 பத்திரிக்கை ஊடகங்களை கவனிக்காத போதும் விளம்பரங்களைத் தந்து தாசா செய்யாத போக்கு
19. அடுத்தவர்களை மதிக்காத போக்கு இருந்த போதும் எவர் வாழ்வு மீதும் கை வைக்காத கண்ணியப் போக்கு (செரீனா வழக்கு உள்ளிட்ட சில விதிவிலக்குகள்)
20. சட்டம், மருத்துவம், வியாபாரம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளை மதிக்காத போக்கு
21. வீரப்பன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் மீது (சட்டம் ஒழுங்கு) சார்பாக கடும் நடவடிக்கை எடுத்தது.
22. சட்டம் ஒழுங்கோடு தொடர்புடைய குற்றவாளிகள் வளராத வண்ணம் காவல்துறை உளவுப்பிரிவை உருவாக்கியது
23. கறுப்புப் பணங்கள் ரியல் எஸ்ட்டேட் தொழிலில் நுழையா வண்ணம் நிலங்களின் மதிப்பைக் காப்பாற்றியது.
24. தமிழர்களின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளின் போது மத்திய அரசுடன் துணிந்து மோதியது.
25. திரைப்படத்துறையைப் பாதுகாக்க வில்லை என்ற போதும் பலவீனப்படுத்தாமல் விட்டது.
26. கட்சிக்காரர்கள் மக்கள் சேவகர்களாக இல்லாத போதும் மக்களை மிரட்டாத போக்கு
27. வியாபாரிகள் தொழில் முனைவோருக்கு பாதிப்பில்லாத போக்கு
28. கூட்டணிக் கட்சிகள் பலமாக இல்லாத போதும் மக்களிடம் அதிருப்தி பெறாதவர்களாக வலம் வந்தது.
29. கட்டுக்கோப்பான பிரச்சாரப் பணிகள் இல்லாமல் பிசுபிசுத்த போதும் மக்களின் அமோக ஆதரவு
30. ஆட்சியைப் பயன்படுத்தி புதிய தொழில்களைக் கைப்பற்றாமல் விட்டது.
31. மன்னர் ஆட்சிபோல ஒருவரின் கீழ் ஆட்சியதிகாரம்
32. காவல்துறையைக் குடும்பப் பாதுகாப்புக்கு பயன்படுத்தாத போக்கு




தி.மு.க.வின் நிலைப்பாடு

1. ஈழப் போரில் சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவின் நேரடி பாதுகாப்பில் இந்திய அரசு நடத்திய போரில் குறைந்தது 50,000 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்ய காரணமாணவர்களோடு கரம் கோர்த்தது.
2. கடும் விலையேற்றம்
3.வேலைக்கு ஆள் சேர்த்ததுடன் கறாரான வசூல் வேட்டை
4. கட்சிக்காரர்களின் அடாவடி, அதிரடி வசூல், வெட்டு, குத்து... போன்றவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டது.
5. நீதிபதிகள் வக்கீல் கோர்ட் ஊழியர்கள் பொதுமக்கள் மீது ஒரு அரசே ரௌடியாக மாறித் தாக்கியது.
6. அனைத்துக் கட்சியிலிருந்தும் சூட்கேஸைக் காட்டியும், மிரட்டியும் ஆள் சேர்த்தது
7.மின்தடையின் விபரங்களை சாதாரண மக்களிடம் சொல்லி சமாதானம் செய்யாதது
8. மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியதால் தேர்தலில் வேட்டியை மட்டும் இழந்தது... இல்லை என்றால்?
9. கையில் அருவாளுடன் திராவிடச் சிந்தனையாளர்கள் மக்களை அடக்கி வைத்தது.
10. கட்சிக்காரர்கள் அடித்த சொத்தைக் கணக்கிட வேண்டுமென்றால் கம்ப்யூட்டருக்கும் காய்ச்சல் வந்து விடும்.
11. திரைப்படத் துறையையே தனது காலடியில் கொசுவாக மிதித்தது.
12. காவல்துறையினரை அடியாளாகவும், அடிமையாகவும் நடத்தியதுடன், பணி மூப்பு என்ற பெயரில் காவலர்களிடம் சமரசம் செய்து தப்பிக்க முயற்சி செய்தது.
13. குடும்பங்கள் கட்சியை விழுங்க அனுமதித்ததுடன் குடும்ப உறுப்பினர்களுக்குள் கொலை வெறி தாண்டவமாட அனுமதித்தது.
14. ஸ்பெக்ட்ரம் போன்ற இமாலய ஊழல்களில் சிக்கிய பின்னும் பரிகாரமாக ஓட்டுக்கு ரூ.5000/- வழங்காமல் கேவலம் ரூ.200/- வழங்கி வாக்காளர்களைக் கேவலப் படுத்தியது.
15.முள்ளி வாய்க்கால் கொடுமையைக் கூட மூடி மறைத்தது. தமிழ்ச்செல்வன் மரணக் கவிதை போல ஓர் இரங்கல் கவிதை கூட எழுத முடியாத தமிழின துரோக நடவடிக்கை
16. இதுதான் சாக்கென்று எதிரி மீது பழி போட்டு தமிழின எதிரி காங்கிரஸை தாசா செய்ய தமிழின ஆதரவாளர்களைக் கைது செய்தது
17. நாஞ்சில் சம்பத் கைது, சீமான் கைது, ம.தி.மு.க கட்சியை உடைத்தது என்று தமிழ் தேசிய ஆதரவு வாக்குகளை அணி சேர்க்க இயலாமல் “வரிப்புலியே வா” என்று கடைசியில் கவிதை எழுதி ஒப்பாரி வைத்தது.
18. விளம்பரங்களை அள்ளி தந்து பத்திரிக்கைகளை குளிப்பாட்டி பின் தேர்தல் நேரத்தில் குடி முழுகியது.
19. விழாக்கள், கேடயங்கள், பட்டயங்கள் வழங்கி ஊக்குவித்த போதும் பட்டயம் பெற்றவர் கூட பயமில்லாமல் வாழ முடியாதபடி கொந்தளிப்பான சமூகத்தினை பாதுகாத்தது.
20. மேற்படி துறைகளைத் தூக்கிப் போட்டு காலில் மிதிக்கும் போக்கு
21. சட்டம் ஒழுங்கினையே நெஞ்சுக்கு அநீதியாக்கியது
22. புதிய குற்றவாளிகளை பற்றிய எவ்வித அறிவுமற்ற உளவுப் பிரிவைக் கையில் வைத்தது
23. கறுப்புப் பண அருவி கொட்டியதில் 5 வருட காலங்களில் நிலங்களின் விலை 100% தாண்டியது.
24. கட்சிக்குத் தேவையான பதவிக்காக மட்டும் மோதல் மற்ற விசயங்களில் பெட்டிப் பாம்பாய் அடங்கியது.
25. ஆக்டோபஸ் கரங்களைப் போல குடும்ப உறுப்பினர்கள் திரைப்படத் துறையை விழுங்க முயன்றது.
26. மீசை முறுக்கி மாதவனாகவும், அடிதடி ஆறுமுகங்களாக மக்களிடம் இருந்து அந்நியப்பட்டது.
27. பத்திரம் பதிந்தால் கூட கறுப்பு ஆடுகளுக்கு கப்பம் கட்டிய கொடுமை.
28. கொடி கட்டிய கட்டப்பஞ்சாயத்து காத்தவராயன்களாக நடந்தது.
29. மிருக பலத்துடன் தேர்தலைச் சந்தித்த போதும் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இயலாமல் போனது.
30. ஆட்சியைப் பயன்படுத்தி டாடா வரையில் மிரட்டியது.
31. முசோலினி சொன்னது போல பல மன்னர்கள் ஆட்சி புரிவதே சனநாயகம் என்பதை நிரூபித்தது.
32. 20% காவல்துறையினர்களை குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க வைத்தது.



இன்னும் பல முரண்பாடுகளோடு இரு அணிகள் தமிழகத்தில் மோதிய போதும் இரு அணிகளும் பலமானதாகவே தெரிந்தது. எப்பொழுதும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகத் திரளும் தமிழ் தேசிய ஆதரவு வாக்கு வங்கி ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்று எழுந்த தமிழர் பிரச்சனையின் போது 5 சதவீதமாக இருந்த தமிழ் தேசிய வாக்கு வங்கி 10 சதவீதமாக இந்த சட்டமன்ற தேர்தலில் உயர்ந்தது. அ.தி.மு.க அணியின் கடைசி நேரத்தில் ம.தி.மு.க இல்லாத போது தமிழ் தேசிய ஆதரவு வாக்கு வங்கி சேதாரம் விளைந்து காங்கிரசுக்கு எதிராக விழுவதில் ஏதேனும் மாற்றம் நிகழுமென்ற நடுநிலையாளர்கள் எதிர்பார்த்தனர். ஈழத்தில் துடிதுடித்து இறந்த தமிழர்களின் கதறல்கள் கடைசிக் கட்டத்தில் தமிழ் தேசிய வாக்கு வங்கிக்கு எவ்வித சேதாரத்தை விளைவிக்காது, காங்கிரசுக்குப் பாடை கட்ட உதவியது. முதுகெலும்பு உடைந்த காங்கிரஸைத் தூக்கி நிறுத்த ஏதேனும் கட்சிகள் தமிழகத்தில் முனைந்தால், அதற்கு தி.மு.க. போல அவைகளும் விலை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இந்த உண்மை முந்தைய ஆட்சியாளர்களுக்கு ஓர் வசவாக தெரியும். இன்றைய ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கு ஓர் ஆதரவாக தெரியலாம். தமிழகத்தின் முகத் தோற்றத்தில் தே.மு.தி.க. ஒரு புதிய சுடராகச் சுடர் விடுகிறது. இருந்த போதும் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள். சுடராக சுடர் விட்டு இன்று நெருக்கடியில் இருப்பது அந்தக் கட்சிகளுக்கு மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் ஓர் எச்சரிக்கை. தமிழ் தேசிய உணர்வினை மக்களுக்கு ஊட்டி விட்டு, காங்கிரஸ் போன்ற எதிரிகளோடு கரம் கோர்த்தால் சொந்த கட்சிக் காரர்களே ஏற்க மாட்டான் என்பதை இனியேனும் உணர வேண்டும்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவு சொல்லும் சேதி, ஆளுங்கட்சி எதிர்ப்பு அலைக்கும் - எதிர்க்கட்சி எதிர்ப்பு அலைக்கும் இடையே நடந்த போட்டியில் வென்றது ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை. பீகார், குஜராத், ஒரிசா, ஆந்திரா, டெல்லி சட்ட மன்ற தேர்தல் அனுபவங்களுடன் தமிழகம் முரண்பட்டே நிற்கிறது. காரணம் அதிகாரம் கையில் வந்தவுடன் ஆளுங்கட்சி குட்டிக்கரணம் அடிப்பதையே ஆண்ட கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டிருந்தன.

(தமிழ் இலக்கியங்களின் பதிவின்படி சேர பூமியாக இருந்து இன்று மலையாள பூமியாக உள்ள கேரள சட்டசபை தேர்தலில் மலையாளிகள் தெளிவாக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் - இடதுசாரிகள் என்று பகுத்துப் பார்த்த போது காங்கிரஸை விட இடது சாரிக்கே அதிக இடங்களை அள்ளி வழங்கினார்கள். கூட்டணி என்று வரும் போது U.D.F. அல்லது L.D.F என்று பகுப்பாய்வு செய்த போது காங்கிரஸ் தலைமையிலான U.D.F. க்கு முன்னுரிமை அளித்துள்ளனர். கேரள வாக்காளர்களுடன் தமிழக வாக்காளர்கள் முரண்பட்டும், இணக்கமாகவும் உள்ளனர். தமிழக வாக்காளர்களைப் பொறுத்த மட்டில் அராஜகம் செய்வது எந்த கட்சியானாலும் துணிவுடன் வீழ்த்திக் காட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் தமிழக மக்கள் இன்னமும் விழிப்புடன் இருக்கிறார்கள். தி.மு.க. - அ.தி.மு.க. தலைமைகளுக்கு ஆதரவினை அள்ளி தந்துள்ளார்கள். ஆனால் தவறிழைத்தால் தூரக் குப்பையில் வீசி எறிய தயங்க மாட்டார்கள் என்பதைத் தமிழக அரசியல்வாதிகள் உணர்ந்தால் அது அவர்களுக்கு நல்லது.



.

No comments:

Post a Comment