Tuesday, August 23, 2011

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்-1


1. வரலாற்றுப் பின்னணி

இந்திய உபகண்டம் புராதான கலாச்சார பண்பாடுமிக்க சமூகமாய் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து நின்ற போது, எமது இந்திய தேசத்தை காரிருள் ஒன்று சூழ்ந்தது. நட்சத்திரங்களும் வெண்ணிலவும், நால்புறத்து நீல நிற கடலும், முத்துவும், பவழமும், வைடுரியமும் நம் சந்தைகளில் கூறுவைத்து விற்றகாலத்தில் நமது முப்பாட்டனின் முன்னோர்கள் விவசாய நெல்மணிகளை பிரிக்க யானை கட்டி போரடித்த காலம். பிராமணன் என்ற வர்ணமும் பின் தாசன் என்ற வர்ணமும் தாசனிலிருந்து இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் 6,400 சாதிகளும் உருவாகாத காலம். காரிருள் சூழ்ந்ததும் வானில் மின்னிய நட்சத்திரங்கள் கரிய இருளுக்கு பலியாவதற்கு விருப்பமின்றி தற்கொலை செய்து பூமியில் விழுந்து மரித்தது. இயற்கை தந்த வரங்கள் கொள்ளைக்கார படைகளாலும், பஞ்சம் பிழைக்க வந்த நாடோடிகளாலும் சீரழிக்கப்பட்டது. பண்பாடு, கலாச்சாரம் கொண்டு கரம் கேரளத்து நாடாண்ட மக்கள் கூறுகட்டி பிரிக்கப்பட்டனர். இந்திய தேசத்தை சூழ்ந்திருந்த காரிருள் பிரம்மன் என்ற ஒரு கொடிய பாம்பாக வாயை பிழந்து விழுங்கியது.

இருள் சூழ்ந்த நம் தேசத்தில் கொளுந்து விட்ட ஜிவாலைகள் வானில் தோன்றிய போதெல்லாம் அந்த கொடூர பாம்பு விழுங்கி உண்டது. மெளரிய, குப்த பேரரசுகள் இந்தியாவை ஆண்ட போது அந்தக் கொடூர பாம்பு கொழுத்துக் கிடந்தது.

கி.பி. 18ம் நூற்றாண்டில் இந்திய சமூகம் பிரம்ம விஷ ஜந்துவான பாம்பு தனது அந்திமக் காலத்தை எதிர் கொள்ளத் துவங்கியது. இந்திய தேசமெங்கும் வியாபித்த தீ ஜிவாலைகள் எழுச்சியுடன் கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. அன்றைய கேரளத்திலும், தமிழகத்திலும் பலமான மின்னல்கள், இடியோடு எழத் துவங்கியது. இடி முழக்கமும், மின்னல்களின் சக்தியும், வீரியமும் விஷ ஜந்துவான பிரம்ம நாகத்தைத் துடிதுடிக்க வைத்தது.

தமிழக, கேரள சூழல்கள் என்பது அன்றைய இந்திய சூழலுக்கு உட்பட்டது என்பதால், அன்றைய இந்திய சூழலை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக கேரள சூழல் என்பது திராவிட சமூக இரு பிரிவுகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலப்பகுதிகளும் சாதிகளற்ற திராவிட சமூகத்தின் ஐந்து கூறுகள் ஆகும். மலை சார்ந்த பகுதி மக்களும். காடு சார்ந்த பகுதி மக்களும், வயல் சார்ந்த வாழ்வு வாழ்ந்த மக்களும், கடல் சார்ந்த மக்களின் வாழ்வுடன், பாலை நில மண் மக்களும் கலந்ததே பாரதத் திராவிட சமூகமாய் அடையாளப்படுத்தப்படுகிறது. நம் தேசத்தை ஆண்ட பரதன், மீனவ குலத்தில் பிறந்ததோடல்லாமல், இன்றைய இந்திய தேசத்தின் கடலினை போக்குவரத்தாக பயன்படுத்தி இந்திய தேசத்தை ஆண்டதால் நம் தேசம் பரத தேசம் என்றாகி பின்னர் பாரத தேசமாய் அறியப்பட்டது.

சதுர்வண, நால்வர்ண முறைக்கு இந்திய சமூகம் இறையாகிய பின்பு - பிராமண வா;க்கம் - இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோதத் துவங்கினர். பிராமண வர்க்கம் இரண்டாக பிளவுபட்டது. கல்வித்துறையில் மேலாண்மை பெற்ற வர்க்கம் அரசுத்துறையில் நாட்டம் கொள்ள தொடங்கினர். பிராமணர்களின் இந்த பிளவு இந்திய இரு பெரும் இதிகாசங்களான ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எதிரொலித்தது. கல்வியே நமது குலப்பணி என்ற பிராமணர்கள் - வசிஷ்டரை குருவாகவும், அரசாள்வதே எங்களது பணியென்ற சத்திரியப் பிராமணர்கள் - விசுவாமித்திரரை தனது குருவாகக் கொண்டனர். சுதந்திரப் போராட்ட காலணிக் காலத்தில், திலகரும், அரவிந்தரும் சத்திரியராக வெளிப்பட, கோகலேயும், பானர்ஜியும் பிராமணராக மிதவாதியாக வெளிப்பட்டனர். வைசியர் என்னும் வர்ணம் வசிஷ்ட வம்சம் என்கிற குல புரோகிதர்களின் பரம்பரையாக இருந்தது. இந்திய சுதந்திரப் போரில் இந்த வசிஷ்ட வம்சம் தேசிய, தரகு முதலாளியாக பரிணமித்து, இந்திய சுதந்திர போரினை, பிராமண சத்திரிய பிராமணர்களை ஒன்றிணைத்து முன்னெடுத்துச் சென்றது. இன்றைய சேட் பிராமணர்கள் வைசிய பிராமணர்களின் கடைசி பிரிவு என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பிராமணன், சத்திரிய பிராமணன், வைசிய பிராமணன் என்று ஆரியர்கள் சதுர்வணத்தில் பலமான மூன்று அடுக்குகளை கைப்பற்றிய பின்பு நான்காவது அடுக்கு சூத்திரன் ஆகும். பிராமணர் அல்லாத அனைத்து இந்தியர்களும் சூத்திரர் என்று புரிந்து கொள்ள வேண்டும். (மார்க்சிஸ்ட் - அக்டோபர் 93-(ப 32))

பின்னால் சூத்திரர்களாக அடையாளப்படுத்தியவர்கள் நிலமற்ற உழைக்கும் மக்களை ‘ஆதிசூத்திரன்’ என்று ஐந்தாவது வடிவம் இந்திய சமூகத்தில் பிறப்பெடுத்த விபரங்களை ஆராய்ந்த முதல் அறிஞர் டாக்டர் அம்பேத்கர் என்னும் இந்திய மின்னலே. திப்புசுல்தான் மற்றும் இஸ்லாமிய மன்னர்கள், தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளுக்கு பின்பு பாளையத்துக்காரர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் அரசாண்ட போதும் அவர்களைச் சத்திரியர்களாக இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்திய சமூகம் என்று சொன்னால் வேத பொருளில் அது இந்து சமூகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கில் இந்திய தேசமெங்கும் பிராமணன் - பிராமணரல்லாதோர் என்ற முரண்பாடு கூராக எழுந்தது. அதன் மற்றொரு வெளிப்பாடானது கிறிஸ்தவ மத செல்வாக்கும், இஸ்லாம் மதத்தின் செல்வாக்கும் என்றே புரிய வேண்டும். இந்து மதம் மிகுந்த செல்வாக்கான மதம் என்பது அதன் வர்ண பேதம் இஸ்லாம், கிறிஸ்துவத்தில் எதிரொலித்தது என்று புரிந்து கொள்ள வேண்டும். சூத்திரன் என்று புறந்தள்ளப்பட்டவர்கள் மிகச் சுலபமாக மதம் மாறுவதிலிருந்து எளிதில் தப்பித்து விடலாம் என்ற வாதம் தவறானதென்று இந்திய சமூகம் நிரூபித்தது. அதன் காரணமாக பிராமணரல்லாதோர் இயக்கம் இந்திய தேசத்தில் சூல் பிடித்த போது அதன் தாக்கம் தமிழக, கேரள சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் பண்பாட்டுத் தளத்தில் பரந்து, விரிந்த பாதையினை உருவாக்கிப் பின் வென்றது.

18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமணர், சத்திரிய பிராமணர், வைசிய பிராமணர் என்று பலமான பிராமண சமூகம் சூல் பிடித்திருந்தது. 1854-ம் ஆண்டு மெக்காலே பரிந்துரைப்படி இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கென்று ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபி இருந்தது.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற வர்ணமான பிராமணர்களே ஆங்கிலேய ஆட்சியின் போதும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றினர். பிராமணர்களின் செல்வாக்கு தமிழக்தில் முந்தைய அரசர்கள் காலத்திலிருந்தே சூல் கொண்டிருந்தது. முதலாம் இராசராசன் கல்வெட்டு ஒன்று பிராமணர்களின் ஊர்களில் பிராமணர் அல்லாதோர் தனது காணிகளை விற்க வேண்டுமென்று கல்வெட்டு கூறுகிறது. (ஆதார நூல் 562 - 1893 ARE/915 1143:s11V238))

கேரளச் சூழலில் கேரளத்து பிராமணர்களான நம்பூதிரிகள் - கேரளப் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும் பரிணமித்த போதும் - வைசிய பிராமணன் என்னும் வர்க்கம் கேரளத்தில் வளரவில்லை. ஏனெனில் அன்றைய கேரளத்தில் சந்தைகள் கிடையாது. (ஆதாரம் அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் பக்கம் 67)

கேரளத்து மக்கள் சாதி, பேதமின்றி பொதுவிடத்தில் கூடக்கூடாது - நம்பூதிரிகள் குடும்பத்து மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்களைதிருமணம் முடிக்க முடியும். சொத்துரிமையில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இரண்டாம், மூன்றாம் நம்பூதிரி மகன்கள், நம்பூதிரி அல்லாத ஜாதிப் பெண்களையே திருமணம் முடிக்க வேண்டும். நம்பூதிரி குடும்பத்துக்குள் ஏகபோக வாரிசுப் போட்டி வராதபடி கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்தது. நம்பூதிரிப் பெண்கள் ஒரு விலங்கினை போலவே கல்வி, சமத்துவ உரிமைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.

வைசியன் கேரளத்தில் இல்லாத போது கேரளத்து சூத்திரரான நாயர்களே நம்பூதிரிகளின் தோழனாகச் செயல்பட்டனர். 11-ம் நூற்றாண்டில் கேரள பூமியில் நாயர்கள் நில பிரபுக்களாக பதவி உயர்வு பெற்றனர். கேரளப் பிராமணர்களான நம்பூதிரிகள் கேரள சூத்திரரான நாயர்கள் மீது சிறிதளவே தீண்டாமை கொடுமையை பிரயோகித்தனர்.

தமிழகத்தில் பலமான சூத்திரரான சைவ வெள்ளாளரை அவர்ணர்களாக தமிழக பிராமணர்கள் ஒதுக்கி வைத்த போது கேரளத்து சூத்திரர்களான நாயர்களை சவர்ணராக உயர்த்தினர். கேரளத்து நாயர்களுக்கு கருவறைக்கு செல்ல மட்டும் உரிமையில்லை என்ற போதும் தமிழகத்து சூத்திரர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து நாயர்களுக்கு ஏற்படவில்லை. கருவறை மட்டுமே நாயர்களை அவர்ணர்களாக்கியது. கேரள சமூகத்தில் நாயர்கள் சவர்ணர்களாக பதவி உயர்வு பெற்றது நில உடைமையின் எதிரொலிப்பாகும்.

கேரளத்தில் அவர்ணர்களின் முதலானவர் ஈழுவர் என்றால், தமிழகத்தில் அவர்ணர்களில் முதலானவர் சைவ வெள்ளாளர் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.(நூல் - அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் - பக்கம் 67)

கேரளத்து நாயர் அறிவு ஜீவிகள் நம்பூதிரிப் பிராமணர்கள் மீது தீராத பகை கொண்டிருந்த போதும் பெரும்பான்மை நாயர்கள் நம்பூதிரிகள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தனா;.

தமிழகத்தில் பிராமணர், எதிர் பிராமணர் அல்லாதோர் என்ற நிலை வருவதற்கான காரணம் சைவ வெள்ளாளர் என்ற ஆத்ம நேயர் வள்ளலார் அவர்களின் கோரப் படுகொலை பிராமண அல்லாதோர் மனங்களில் தீராத வடுவாக எதிரொலித்தது.

கேரளத்து அவர்ணர்களின் முதலாமானவர்களான ஈழுவர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்த காலங்களில், தமிழகத்தில் சைவ வெள்ளாளர்களுக்கெதிராக எவ்விதக் கொடுமையையும், தமிழகப் பிராமணர்கள் செய்யவில்லை. வள்ளலாரின் ஒரு சாது, ஒரு மதம், ஒரு கடவுள் என்ற சமரச சன்மார்க்க நெறி பிராமணர்களின் சதுர்வர்ணத்துக்குச் சவாலானது என்பதால் ஜீவ ஜோதியில் கலப்பது என்ற வள்ளலாரின் சன்மார்க்க நெறியை திரித்துத் தீயிலிட்டு தீட்டு நீக்கியது. தமிழகத்து சவர்ணம் - (அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் பாகம் 1 P 47)

வள்ளலாரின் உயிர் தியாகம் தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் சூல் பிடிக்கக் கருமருந்தானது - சைவ வெள்ளாளர்களும் பொருளாதார பலம் வாய்ந்த தமிழகத்து சூத்திரர்களும் இணைந்து பி.டி. தியாகராயர் T.M. நாயர் மற்றும் பனகல் அரசர் தலைமையில் 1916-ல் தென்னிந்திய நல உரிமை சங்கம் உருவாக்கினர். பிராமணரல்லாதோர் மாணவர் அமைப்பு ஒன்று சென்னையில் 1906-ல் தென்னிந்திய பிற்பட்ட வகுப்பு சங்கம் துவங்கப்பட்டது. வித்தர் ராம் ஷண்டே என்னும் பிரம்ம சமாஜியே இதை உருவாக்கினார். பாம்பே மாநிலத்தைச் சேர்ந்த இவர் அனைத்திந்திய தீண்டாமை எதிர்ப்பு மாநாட்டையும் கூட்டினார். (பெ.சு.மணி - பிரம்ம சமாஜம்) பின் தென்னிந்திய நல உரிமைச் சங்கமே தமிழக பூமியில் பிராமணரல்லாதோர் அதிர்வலைகளை முழங்கியது.

கேரள சூழலில் பிராமணரல்லாதோர் இயக்கத்திற்கு தூபமிட்டவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்த சட்டம்பி சாமிகளாவார். கேரளத்து நம்பூதிரிகள் நாயர்களுக்கு கருவறை நுழைய அனுமதிக்காத போது, கேரளத்து சூத்திரர்களான ஈழவர் உள்ளிட்ட சாதிகளுக்கு நேர்ந்த கொடுமை கண்டு நாயர்கள் நம்பூதிரிகளிடம் உறவினை விட்டொழித்து ஈழவர் உள்ளிட்ட கேரளத்து சூத்திர மற்றும் பஞசமர்களிடம் உறவு வைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார் (அதே நூல் பக்கம் 28) ஆனால் காலங்காலமாக ஏகபோக வாழ்வு வாழ்ந்த நாயர்கள் நம்பூதிரிகளுடனான உறவினை விட்டொழிக்க முன்வராததால் சட்டம்பி சுவாமிகள் துவக்கி வைத்த பிராமணர் எதிர் பிராமணரல்லாதோர் இயக்கம் கேரளத்தில் தோல்வியடைந்தது.

தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் வேர் கொண்டு, நீதிக்கட்சியாய் பரிணமித்தது. சைவ வெள்ளாளர்களும் அன்றைய மரபு வழி பணக்காரர்களும் தொழில்துறை முதலாளியுமான வெள்ளுடை வேந்தர் தியாகராயர் என அழைக்கப்பட்ட பி.டி. தியாகராயர் தேவாங்கர்கள் என்னும் குலத்தைச் சேர்ந்தவர் - நெசவுத் தொழிலை தம் வாழ்க்கைத் தொழிலாக கொண்ட குலம் சென்னை மாநகராட்சி, மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல பொது நிறுவனங்களில் பங்கேற்றவர். மயிலாப்பூர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இவர் ரூ.10,000 நன்கொடை கொடுத்திருந்தும் கூட, இந்து வைதீகராக இருந்த தியாகராஜ செட்டியாரை மேடைக்குக் கீழே உட்கார வைத்தனர். (அர்த்தியால் பென்ஸ் “வீரத்தியாகிகள் முழக்கம்” மூல நூல்(ஆதார நூல் - தீண்டப்படாதவர்களால் தீண்டப்படாத புதிய கட்சி பக்கம் 69) பொருளாதார பலம் பொருந்திய சைவ வெள்ளாளரையும், அன்றைய சென்னை மாகாணத்தில் பலமான செட்டியார் இனத்தைக் கூட சூத்திரராக அவமானப்படுத்திய பின் நீதிக்கட்சியின் வேகம் தமிழகத்தில் சூடுபிடித்தது.

பிராமணர்களுக்கும் சைவ வெள்ளாளர்களுக்குமிடையே (சூத்திர பணக்கார இதர ஜாதிகளும்) இருந்த முரண்பாடானது உயர் சாதி இடுக்கினில் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென்ற யாசக முரண்பாடுதான் என்றும் அது சாதிய மறுப்பு என்ற தீவிர முரண்பாட்டினை நோக்கி இட்டு செல்லவில்லை என்பதால் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவினை இழந்தது.

அதன் காரணமாகவே 1921-ல் நீதிக்கட்சி தலைவர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் அதன் தலைவர்கள் டி.வி.சுப்பிரமணியன், ஜோசப், கண்ணப்பன் தலைமையில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கினை உருவாக்கத் தொடங்கினர். அதனாலே கடுமையான கல்லடி தாக்குதலுடன் 300 வழக்குகள் நீதிகட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டது..(G - O - 1227, Pub(Gen - A) Dept - date - 24-4-1958)

பிராமணரல்லாதோர் இயக்கம் நீதிக்கட்சியாய் பரிணமித்த போதும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவின்றி அது குறுகிய காலத்தில் தனது அந்திமத்தை எதிர் கொண்ட போது பலமான சூறைக்காற்றொன்று ஈரோட்டு திசையிலிருந்து தமிழகம் முழுக்க சுழன்று வீசத் தொடங்கியது. தேச விடுதலை நம் மக்கள் விடுதலை என்று சுதந்திர போராட்டத்தை நேர்மையுடன் எதிர் கொண்ட ஒரு தன்னலமற்ற விடுதலை வீரனின் நேர் கொண்ட பார்வையை திருப்பி விட்டது. வ.வே.சு.ஐயர் என்னும் நேர்மையற்ற சனாதன சுதந்திர போராட்ட வாதி என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

3000 ஆண்டுகளுக்கு முன் அகதியாக வந்த பார்ப்பன குழந்தைகளும், சார்வாகமும், சமணமும், பௌத்தமும், சாங்கீயமும் தழைத்தோங்கிய போது அரசாண்ட குலமான பிராமணரல்லாதோர் குல மாணவர்களும் இணைந்து உணவருந்தினால் நாடோடிக் குலத்துக்கு இழுக்காகி விடும் என்ற போது ஈரோட்டு சூறாவளியின் கண்ணுக்குள் செஞ்சூரியனொன்று கொழுந்து விட்டு எரிந்தது. நாடாண்ட குலங்களை நாடோடி குலம் வேட்டையாடுவதா! இங்கே நடந்து வரும் போர் இந்திய சுதந்திர போரா அல்லது வெள்ளையர்களை வெளியேற்றி விட்டு வெள்ளையரின் இருப்பிடத்தில் பார்ப்பண சவர்ணர்களை அமர வைப்பதா என்ற கேள்வியின் பதில் வர்ண போராட்டமே தேவையென்று உணர்ந்தார். ஏனென்றால் அன்றைய சுதந்திர போராட்டத்தின் தலைமை பார்ப்பனர் வசமே இருந்தது. மகாத்மா காந்தியடிகள் என்னும் மகான் பிராமணரல்லாதோர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களின் மூன்றடுக்கு போக எஞ்சியுள்ள அடுக்கு மகாத்மாவுக்கு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. மகாத்மாவை அவர்கள் வைசிய குலத்தை சேர்ந்தவரென்று பிரகடனப்படுத்தினர். ஏனெனில் சூத்திரர் ஒருவரின் பின்னால் பிராமணர்கள் அணிவகுப்பதை விரும்பாததால் மிக சுலபமாக சமரசம் செய்தனர். ஏனெனில் மகாத்மா இல்லையென்றால் சுதந்திர போர் பின்னோக்கி நகர்ந்து விடுமென்று அவர்கள் உணர்ந்தனர். கேரள பூமியில் மகாத்மா காந்தியடிகள் ஸ்ரீ நாராயண குருவை சந்தித்த பின் “என் மனதில் நீங்காத பல புதிர்கள் நாராயண குரு சுவாமிகளை சந்தித்த பின்னே ஐயங்கள் விலகியது” என்று கேரள சிவகிரி குறிப்பில் காந்தியடிகள் கைப்பட எழுதியுள்ள விபரங்கள் ஆய்வுக்குரியதாகும்.

யங் இந்தியா இதழில் அக்டோபர் 12, 1921 - அன்று மகாத்மா காந்தியடிகள் கருத்துப்படி “நான் என்னை சனாதன இந்து என சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகின்ற அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறப்புகளையும் நான் நம்புகிறேன். என் கருத்துப்படி வேத பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல் நான் வர்ணாசிரம தர்மத்தை நம்புகிறேன். மகாத்மா காந்தி அவர்களின் மேலே கண்ட புரிதல் அம்பேத்கரின் புனே ஒப்பந்த நிலைப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்தை தந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மகாத்மா அவர்கள் சுதந்திரப் போரே பிரதானமானதாக முன்வைத்தார். பாரதியாரின் ஆரிய சமாஜ் கருத்துப்படி சாதி, மதம், ஒரு சில்லரை விசயமாக பார்த்தார் என்றே பரிசீலிக்க வேண்டும். பிராமணரல்லாத மகாத்மா சதுர்வர்ணத்தில் தனது அடுக்கு எதுவென்று உணர்ந்த போதும் சுதந்திர தேசமே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் என்ற பரிசீலனையே நேர்மையான பரிசீலனையாகும். ஏனெனில் இந்திய சமூக புரட்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒடுக்குதலிலிருந்தே எழுவார்கள். அபூர்வமாய் ஒரு வள்ளலார் உருவாக இயலும். அவர்கள் விதி விலக்குகள் என்றே உணரவேண்டும். சனாதன தர்மம் தவறென்று வாதிடுபவர்களை சமூகப் புரட்சியாளர்கள் என்றழைப்பது தவறல்ல என்ற போதும், இன்றைய தமிழ்நாட்டு சூழலில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளே படியடுக்குகள் உள்ளது என்பதை விஞ்ஞானப்பூர்வ பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தமிழகத்தில் எழுந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியே தேவேந்திர மற்றும் பேரிகை ஜாதியினரிடையே ஒரு சமத்துவ எழுச்சியை உருவாக்கியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். விடுதலை சிறுத்தைகள் (பேரிகை சாதியினர்) எழுச்சியானது ‘நிறப்பிரிகை’ இதழ் தந்த பண்பாட்டு தள ஆய்வின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியேயாகும்.

தந்தை பெரியாரின் இயக்கம் ஆரியர் மேலாண்மையினை அப்புறப்படுத்தியதுடன், சைவ, வைணவ தாக்குதலுக்குண்டான தமிழ் சமூகத்தை புதியதொரு பாதையினை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தந்தை பெரியாரின் விமர்சனங்கள் கூர்மையான உள்ளர்த்தங்களைத் தாங்கி நின்றது. தமிழ் சாதிகள் மோதுகின்ற காலகட்டத்தில் அச்சமின்றி கருத்து தெரிவித்த அபூர்வ சிந்தனையாளர்... பச்சைத் தமிழன் காமராசு என்ற பெரியாரின் விமர்சனம் பச்சைத் தமிழரால் தலைநகர் அரசியலில் தமிழகம் சார்பான தாக்கத்தை உருவாக்க முடிந்தது. கல்வி கற்காத முதல்வர் காமராஜராலே தமிழகம் கல்வி கற்றது. தந்தை பெரியாரின் கையிலிருந்த பிராமணரல்லாதோர் இயக்கம் விலகி சென்றதனாலே பெரியார் சிந்தனை வேகம் குறை துவங்கியது. கடவுள் மறுப்பாளர், நாத்தீகப் போராளி தமிழ் - மொழி பாதுகாவலர், பெண் விடுதலையாளர் என்று தந்தை பெரியார் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகாசித்துக் கொண்டிருந்த காலத்தில், பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கு சோதனையாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு பெரியார் இயக்கத்துக்கு மிகுந்த தலைவலியாக இருந்து வருகிறது. திராவிட இயக்கங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சரிசமமாக அங்கீகரித்த போதும், தமிழ் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதிகளுக்கிடையேயான புரிதலின்மை தமிழ் சமூகத்தின் பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது. முதலில் மொழி பற்றிய புரிதலை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1 comment:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல அலசல் .
பகிர்வுக்கு நன்றி.

Post a Comment