Monday, May 7, 2012

ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க!


நோயொன்று வந்து, மருத்துவர்களிடம் சென்று விட்டால் போதும்! நோயைக் குறைக்கிறார்களோ இல்லையோ பணத்தைக் கறப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது இன்று நாடறிந்த உண்மையாகி வருகிறது.

பணம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மனித நேயம் மறக்கப்பட்டு வருகிறது.

மனிதன் வாழ்க்கைக்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட கொடைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையை விட்டு, செயற்கைக்குப் போன மனிதன் தன் ஆசை அதிகரிப்பால் அதையும் தாண்டி இயற்கையை முற்றிலுமாக அழிக்கத் தொடங்கி விட்டான். இயற்கையையே மறந்து போய் விட்டான்.

இயற்கையின் மறைவால், செயற்கையின் விளைவு கடுமையாக இருக்கிறது. இயற்கையின் சீற்றம் மனிதனைப் பாடாய்ப் படுத்துகிறது.

இது போல் இயற்கை உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் மறந்ததால் மனிதன் வாழ்க்கை நோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த நோயின் பிடியில் இருப்பவர்களை தங்களின் மருத்துவத் தூண்டிலில் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தைப் பிடிக்க மருத்துவர்கள் வந்து விட்டார்கள் என்கிற உண்மையையும் இயற்கையான உணவும், உடற்பயிற்சியும் இருதய நோயைக் கூடக் குணப்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் உருவாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட குறும்படம் இது.

கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பார்த்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.



யூ டியூப்பில் பார்ப்பதற்கான இணைய முகவரி:

http://youtu.be/LP-G6lXPJ3g

ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க!

Monday, April 16, 2012

தேனி எம்.சுப்பிரமணிக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு


முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியராகவும், தமிழ் விக்கிப்பீடியா பயனர்-நிர்வாகிகளுள் ஒருவராகவும் இருந்து வருபவர் தேனி. எம்.சுப்பிரமணி. இவர் தமிழ் விக்கிப்பீடியா எனும் நூலை கடந்த 2010 ஆம் ஆண்டில் எழுதியிருந்தார். இந்த நூலை சிதம்பரம், மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது.


தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் தமிழில் வெளியான நூல்களில் 31 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையின் கீழான வகைப்பாட்டில் தேனி எம். சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரம் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தமிழ்த்தாய் விருதினை மதுரை தமிழ்ச் சங்கத்திற்கும், உ.வே. சா விருதினை புலவர் செ. இராசுக்கும், கபிலர் விருதினை பேராசிரியர் அ.அ.மணவாளனுக்கும், ஔவையார் விருதினை திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கும் வழங்கினார்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாநூலை எழுதிய தேனி எம். சுப்பிரமணிக்கு சிறந்த நூலாசிரியர் பரிசுத் தொகை ரூபாய் முப்பதாயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். தமிழ் விக்கிப்பீடியா நூலை வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 27 நூலாசிரியர்களுக்கும் இந்நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்கும், பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தேனி எம். சுப்பிரமணி எழுதிய முதல் நூலே தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நண்பர் தேனி எம்.சுப்பிரமணி மென்மேலும் பல பரிசுகள் பெற்று மேலும் சிறப்படைய வாழ்த்துவோம்.